இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்... தமிழக மீனவர்கள் 13 பேர் கைது


ராமநாதபுரம் : தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

எல்லைத் தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி, தமிழக மீனவர்கள் தாக்குதல் நடத்துவதும், கைது செய்துவம் தொடர்கதையாகி வரும் நிலையில், படகுகளுடன் 13 மீனவர்களை மீண்டும் இலங்கை கடற்படை சிறைப்பிடித்ததுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலிருந்து நேற்று கடலுக்கு மீன்பிடிக்க இரு படகுகளில் சென்ற மீனவர்கள் 9 பேரும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை எல்லைத் தாண்டி வந்ததாக கூறி மீனவர்கள் 9 பேரையும் அவர்களது படகுகையும் சிறை பிடித்தனர்.
இந்நிலையில் கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மேலும் 4 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்ட 13 மீனவர்களும் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும், மீனவர்களின் 3 மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடலோர காவல் படை, அவர்களை காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறது.

நேற்று முன்தினம் நாகை அருகே எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 25 பேரை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர். மேலும் இலங்கை மீனவர்களின் 4 மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.