சென்னை மெட்ரோ ரயிலில் இன்று இலவச பயணம்


சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகிய மெட்ரோ ரயில் தடங்களின் அனைத்து பணிகளும் முடிந்து இன்று முதல் முழுமையாக சேவையை தொடங்குகிறது. கடைசிகட்ட வழித்தடமான டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான சேவையை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

சென்னை மெட்ரோ ரயில் சேவை 42 கிமீ தொலைவிலான முதல் வழித்தடத்திட்டத்தில் நீல நிற வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலும், பச்சை நிற வழித்தடத்தில் சென்டிரல் முதல் சென்ட் தாமஸ் மவுன் வரையிலும் என இரண்டு வழித்தடங்களில் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில் பச்சைநிற வழித்தட ரயில்சேவை கடந்த சில மாதங்களுக்கு முன் முழுமையாக இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது டி.எம்.எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான 10 கிலோமீட்டர் சுரங்கபாதை மெட்ரோ ரயில் பணிகள் இன்று முதல் தனது சேவையை தொடங்குகிறது. இதனால் இனிமேல் சென்னை அண்ணாசாலையில் வாகன நெரிசல் முற்றிலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெட்ரோ ரயில் முதல் வழித்தடத்தில் முழு சேவை இன்று முதல் தொடங்குவதை அடுத்து பொதுமக்களை ஈர்க்கும் வகையில் இன்று ஒருநாள் மட்டும் அனைத்து வழித்தடங்களிலும் பொதுமக்கள் இலவசமாக மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.