மும்பை தாராவியில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி


மும்பை:

மும்பை தாராவி குஞ்சுகுர்வே நகரை சேர்ந்தவர் தீபக் லட்சுமண் (வயது23). இவர் அங்குள்ள குடிசை வீட்டின் மேல்தளத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று காலை அவரது தாய் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வரும்படி கூறினார். அதன்பேரில் தீபக் லட்சுமண் கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது, அங்குள்ள மின்சார மீட்டர் பெட்டியில் இருந்த மின்வயர் அறுந்து தொங்கி கொண்டிருந்துள்ளது.

இது தெரியாமல் தீபக் லட்சுமண் அங்குள்ள இரும்பு ஏணியில் ஏறிய போது, அந்த வயரில் அவரது கை பட்டு விட்டது. இதில், அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவர் அலறினார். இந்த சத்தம்கேட்டு வீட்டில் இருந்த அவரது தாய் மற்றும் தம்பியும் ஓடிவந்து அவரை மீட்க முயன்றனர். இதில் அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

இந்த சம்பவத்தில் தீபக் லட்சுமண் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது தாய் மற்றும் தம்பி காயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக சயான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவல் அறிந்து வந்த சாகுநகர் போலீசார் பலியான தீபக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.