பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது
+2 Result Today ரேங்க் முறை இனி கிடையாது
சென்னை : பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது. மாநில அளவில் 1, 2, 3 இடங்களை பிடித்த மாணவர்கள் என்ற ரேங்க் முறை இனி கிடையாது என்று அரசு அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக பள்ளிகளுக்கு மதிப்பெண்கள் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. காலை 10 மணிக்கு அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 6,737 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர்.மேலும், பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கான மதிப்பெண்கள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். மாநில அளவில் 1, 2, 3 இடங்கள் என ரேங்க் முறை ரத்து செய்யப்பட்டு இனி ரேங்க் முறை கிடையாது என்று அரசு அறிவித்துள்ளது. மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு சிறந்த மாணவர் என்ற சான்று மட்டுமே வழங்கப்படும். பாடதிட்டம் தாமதம்: பள்ளிக் கல்வித்துறையில் ஒவ்வொரு 5 ஆண்டுக்கு பிறகும் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக தமிழக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படாமல் இருந்தது. 2015ம் ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றி அமைப்பதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித்
துறை ஏற்பாடு செய்தது. அதற்காக வல்லுநர் குழு அமைக்கப்பட்டு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகத்தின்(NCERT) வரைவு பாடத்திட்டத்தின் அடிப்படையில் புதிய அம்சங்களை சேர்த்து பாடதிட்டம் தயார் செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் பாடப்புத்தகம் தயாரிக்கப்பட்டது. அவற்றை அச்சிட்டு வழங்க அரசிடம் அனுமதி கேட்டு பள்ளிக் கல்வித்துறை விண்ணப்பித்து இருந்தது.