இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்


பிரதமர் மோடி தலைமையிலான ஆளும் பாஜக அரசின் கடைசிபட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது. இந்நிலையில் 2019 உடன் ஆட்சிக்காலம் முடிவடைவதையொட்டி விரைவில் மக்களவை தேர்தல் வரவுள்ளது.

இந்நிலையில் இன்று நாடாளுமன்றபட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ளது.காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இன்று தொடங்கும் கூட்டத்தொடர் வருகிற பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெற உள்ளது.
நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருவதால் 2019 - 2020ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள பியூஷ் கோயல் நாளை (பிப்.1) தாக்கல் செய்ய இருக்கிறார்.

இந்த கூட்டத்தொடரில் முத்தலாக் மசோதா, குடியுரிமை திருத்த மசோதா, தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேபோன்று ரஃபேல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பலாம் என்று கருதப்படுகிறது.